Saturday 15 October 2011

மிரட்டும் மூல நோய்.. விரட்ட வழிகள்

மூல நோய் பாதித்தவர்கள் படும்பாடு சொல்லில் அடங்காதது. உயிர் போகும் வலியால் துடிதுடித்து போவார்கள். இதற்கு அறுவை சிகிச்சை தீர்வு என்றாலும், உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மூலமும் தீர்வு காணலாம் என்கிறார் மருத்துவர் சசிக்குமார். கண்டுகொள்ளாமல் விடப்படும் மூலம் கேன்சராக மாறலாம் என்றும் எச்சரிக்கிறார். அவர் கூறியதாவது: ஆசனவாய் பகுதியில் ரத்தக்குழாய் தடிமன் ஆவதுதான் மூலமாக உருவெடுக்கிறது. இதன் அறிகுறியாக முதலில் அரிப்பு ஏற்படும். இயற்கை உபாதை கழிக்கும் போது மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். வழக்கத்துக்கு மாறாக மலச்சிக்கல் இருக்கும். சில நேரங்களில் ரத்தம் வெளியேறும். அதன்பிறகு சில மணி நேரம் வரை தொடர்ந்து வலி, எரிச்சல் போன்றவை இருக்கும். அழுத்தம் அதிகம் கொடுப்பதால் ஆசனவாயின் வெளிப்பகுதியில் சதை வளர்ச்சி ஏற்படும். உள் பகுதி தடிமன் ஆவதை உள் மூலம் என்றும், சதை வெளித்தள்ளும் போது வெளிமூலம் என்றும் கூறுகிறோம். 

மூலம் உண்டாவதற்கு முக்கிய காரணமே மலச்சிக்கல் தான். பரம்பரையாகவும் இந்நோய் வரலாம். உடல் எடை அதிகம் இருப்பவர்கள், தொந்தி உள்ளவர்களுக்கு வயிறு அழுத்தம் அதிகரித்து மூலப் பிரச்னையை உருவாக்குகிறது. பொதுவாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இது வரும். ஆரம்பக்கட்டத்திலேயே உடலில் ஜீரணம் மற்றும் வெளியேற்றம் ஆகிய சுழற்சியில் பிரச்னை உள்ளதா என்பதை அறிந்து கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பிரச்னை பெரிதாகி விடும். முதலில் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். மலச்சிக்கலைப் போக்கும் உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். போதுமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதற்கென பிரத்யேக யோகா பயிற்சிகளும் உள்ளன. சிலர் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின்னர் உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். இல்லையென்றால் மீண்டும் வளர்ந்து மிரட்டும்.

முறையான சிகிச்சை எடுக்காத பட்சத்தில் ஆசன வாய்ப்பகுதியில் வெடிப்பு போல புண் ஏற்பட்டு ஆறாமல் தொந்தரவு செய்யும். அதில் இருந்து ரத்தம் வெளியேறும். இது ஆறாமல் தொடரும் போது புற்று நோயாக மாற வாய்ப்புள்ளது. இதில் ஏற்படும் கொப்பளங்கள் புரையோடி குடல் பகுதியில் துளையை உருவாக்கும். எனவே மூலப் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஆரம்பத்திலேயே சரி செய்து கொள்வது அவசியம். 

பாதுகாப்பு முறை: நார்ச்சத்து உள்ள உணவு வகைகள் மற்றும் பழங்கள், கீரைகள் சாப்பிடுவதன் மூலம் இதை தவிர்க்கலாம். மேலும் மூலப்பிரச்னை உள்ளவர்கள் அசைவம் மற்றும் மசாலா உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். தொப்பை உள்ளவர்களும், குண்டானவர்களும் உடல் எடையை குறைக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சியை வழக்கப்படுத்தி கொள்வது நல்லது. குறைந்தளவு தண்ணீர் குடிப்பதாலும் இந்த பிரச்னை ஏற்படுகிறது. கேரட் ஜூஸ் தினமும் குடிப்பது நல்ல பலனைத் தரும். காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை சாறு குடித்தால் ஓரளவு தீர்வு காணலாம். அகலமான பாத்திரத்தில் சுடு தண்ணீர் நிரப்பி அதில் உட்காரும் போது வலி குறையும்.                  

ரெசிபி

கருணைக்கிழங்கு குழம்பு: கருணைக் கிழங்கை உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும். எலுமிச்சை அளவு புளியை கெட்டியாக கரைத்து கொள்ளவும். சின்ன வெங்காயம் ஒரு கப் அளவு உரித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். இத்துடன் மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி அத்துடன் புளிக்கரைசல் சேர்த்து உப்பு போடவும். வேக வைத்த கருணைக்கிழங்கை உதிர்த்து கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். கெட்டியானதும் இறக்கவும். மூலத்தால் உண்டாகும் புண்களை கருணைக் கிழங்கு குணப்படுத்தும். 

வெந்தயக் கீரை கட்லட்: கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெந்தயக் கீரையை சுத்தம் செய்து நெய்யில் வதக்கவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய காய்கறிகளுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, ரொட்டித்தூள், வதக்கிய வெந்தயக் கீரை, பச்சைப் பட்டாணி ஆகியவற்றை உலர்வாக பிசைந்து கொள்ளவும். இதை வடை போல தட்டி தோசைக் கல்லில் எண்ணெய் வார்த்து வேக வைத்து சாப்பிடலாம். இதில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது. 

பூண்டு சாதம்: பூண்டு 100 கிராம் அளவுக்கு எடுத்து உரித்து பொடியாக நறுக்கவும். இதை நல்லெண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பாசுமதி அரிசியை தனியாக உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும். இத்துடன் வதக்கிய பூண்டு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி வேகவைத்த பாசுமதி அரிசி சாதத்தையும் சேர்த்துக் கிளறவும். பூண்டில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

டயட்

உணவுதான் மூலத்துக்கு தீர்வு. தினமும் இரண்டு வேளை உணவில் கீரை சேர்க்க வேண்டும். முளை கட்டிய பயறு வகைகள், மாதுளை, சப்போட்டா ஆகிய பழங்களை சாப்பிடலாம். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவு நேரத்தில் பூண்டை உரித்து பொடியாக நறுக்கி பாலில் போட்டு கொதிக்க வைத்து அருந்தலாம். தினமும் பூண்டு பால் சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்னையில் இருந்து விடுபடலாம். வாரத்தில் இரண்டு முறை கருணைக் கிழங்கை உணவில் சேர்க்க வேண்டும். கத்தரிக்காய், தேங்காய், கருவாடு மசாலா உணவுகள் தவிர்க்கவும். சில்லி சிக்கன், சில்லி மீன் என எண்ணெயில் பொரித்த, பொரிக்காத அசைவ வகைகள், முட்டை வேண்டாம். சுத்த சைவமாக மாறிவிடுவது நல்லது. கீரைகள், நார்ச்சத்துள்ள காய்கறிகள் தினமும் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. 

பாட்டி வைத்தியம்

அக்ரூட் விதையை ஆசனவாயில் சிறிது செருகி வைத்துக் கொண்டால் மூல வேதனை, வலி குறையும். 

அகத்திக் கீரை சாற்றில் ஐந்து கடுக்காய்களை உடைத்துப் போட்டு கஷாயம் வைத்து ஆசனவாயில் தடவினால் எரிச்சல் குணமாகும்.

அம்மான் பச்சரிசிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் மலக்கட்டு உடையும். 

அரைக்கீரையுடன் பாசிப்பயிறு, மிளகு, நெய் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும். 

ஆகாயத் தாமரை இலையை அரைத்து கட்டினால் வெளிமூலம், மூலக்கட்டி போன்றவை குணமாகும். 

ஆடையொட்டி இலை, வில்வ இலை இரண்டையும் சம அளவில் எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் குடல் புண் மற்றும் மூலப்புண் குணமாகும். 

ஆமணக்கு விதைப்பருப்பை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் மலக்கட்டு தீரும். 

அரை லிட்டர் ஆமணக்கு எண்ணெயுடன் கடுக்காய் 50 கிராம் சேர்த்து காய்ச்சி வைத்து கொள்ளவும். இதனை தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டால் குணமடையும்.

மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் விளக்கெண்ணெய்யை தினமும் ஆசன வாயில் தடவினால் தீர்வு காணலாம்.

ஆலம் பழத்தை உலர்த்தி பொடி செய்து சர்க்கரை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். ஆவாரம் பூவை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும். 

இஞ்சி சாற்றில் கடுக்காய் பொடியை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டால் விடுதலை பெறலாம். 

இஞ்சியை துவையல் அல்லது பச்சடி செய்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் தீரும். 

இலந்தை இலையை அரைத்து புளித்த மோரில் நெல்லிக்காய் அளவு கலந்து குடித்தால் மூலக்கடுப்பு குணமாகும்.

கண்நோய்களுக்கு கலக்கல் டிப்ஸ்!

கண்கள் மிகவும் மென்மையானவை. கண்களை சுற்றி 12 தசைகள் இயங்குகின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டால்கூட கண்நோய் வருகிறது. இதனால் கண்கள் கனமாக தோன்றுவதுடன் விரைவில் சோர்வடையும். பார்வை மங்குவதற்கும் வாய்ப்புள்ளது. ஓவியம், எம்பிராய்டரி போன்ற நுட்பமான வேலை செய்பவர்களுக்கு அஸ்தனோபியா என்ற தொந்தரவு வரும். தொடர்ந்து டிவி, சினிமா பார்த்தால் கண்கள் சோர்வடையும். கண்களில் வலி இருக்கும். இமைகள் கனமாக இருக்கும். தலைவலியும் வரும். 

மேலும் தொடர்ந்து படிக்கும் போது கண் மங்கலாக தோன்றும். நீண்ட நேரம் இரவில் விழித்து டிவி பார்ப்பதாலும் கண் பாதிப்பு ஏற்படும்.
இதனால் கண்ணின் கருவிழி மற்றும் ஜவ்வு, கண் இமைகளின் உட்பகுதி விளிம்பு ஆகியவற்றில் சிலநோய் அறிகுறிகள் தென்படும். கண் சிவத்தல், கண்ணில் தூசு விழுந்தது போன்ற உறுத்தல், இமைகள் வீங்குதல், கண் கூசுதல், கண்களில் நீர் வடிதல் போன்றவை ஏற்படலாம். சிலருக்கு கண்கள் எப்போதுமே சிவப்பாக காணப்படும். மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு பொதுவாக ரத்தக் குழாய்கள் விரிவடையும். 

அதே போன்று கண்ணின் வெண்விழி ஜவ்விலும் உள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து சிவப்பாக தோன்றும். ரத்தத்தில் ஆல்கஹால் அளவு குறைந்தால் கண்கள் வெண்மை நிறத்துக்கு மாறிவிடும். மதுப்பழக்கம் இல்லாத சிலருக்கும் ரத்தக்குழாய் தடிமனால் கண்கள் சிவப்பாக தோன்றலாம். இதனை குளிர்க்கண்ணாடி அணிந்து சமாளிக்கலாம். கண் சிவந்து வலியும் இருந்தால் கண்ணில் புண் அல்லது கண் நீர் அழுத்தம் காரணமாக இருக்கலாம். இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும். 

வெண்விழியில் உள்ள ஜவ்வில் வைரஸ், பாக்டீரியா தொற்று, அலர்ஜி மற்றும் கண்கள் உலர்ந்து போதல், ரசாயன பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமை, தூசு விழுதல் ஆகிய காரணங்களாலும் கண்கள் வீங்கி சிவப்பாக மாற வாய்ப்புள்ளது. எனவே கண்ணில் சிறிய பிரச்னை இருந்தாலும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். சுயமருத்துவம் செய்வது தவறாகும். இருசக்கர வாகனத்தில் கண்ணாடி இல்லாமல் செல்லுதல், கம்ப்யூட்டர் திரையை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருத்தல், கண்நோய் மற்றும் டென்ஷன் காரணமாகவும் கண்ணில் நீர்வடியும். 

இதில் இரண்டு வகை உண்டு. கண் உறுத்தல், புண், அடிபடுதல், மனச்சோர்வு ஆகியவற்றால் ஏற்படுவது ஒருவகை. இன்னொரு காரணம் எபிபோரா. கண்ணீர் வெளியேறும் பாதைகளில் உள்ள அடைப்புகளினால் கண்ணில் நீர்வடியும். இது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் கண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். உடனடி சிகிச்சையின் மூலம் பார்வை இழத்தல் உள்ளிட்ட பிரச்னைகளை தவிர்க்கலாம் என்கிறார் கண் மருத்துவ நிபுணர் டாக்டர் செல்வரங்கம். 

பாதுகாப்பு முறை: குறிப்பிட்ட இடைவெளியில் கண் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் பிரச்னைகளை துவக்கத்தில் கண்டறிந்து சரி செய்யலாம். நாள்பட்ட சர்க்கரை மற்றும் மிகை ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் நோயை கட்டுக்குள் வைப்பது அவசியம். கண்ணில் ஏற்படும் நோய் தொற்று அறிகுறிகளை உடனே அறிவதும் முக்கியம். திடீர் பார்வையிழப்பு, தெளிவற்ற பார்வை, கண்களில் ஒளி வீசுதல், கறுப்புப் புள்ளிகளின் தோற்றம் போன்றவை கண் அழுத்த நோய் அல்லது மூளை பாதிப்பின் விளைவாக இருக்க வாய்ப்புள்ளது. 

சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்களில் இருந்து கண்களை பாதுகாக்க கண்ணாடி அணியலாம். வைட்டமின் ‘ஏÕ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும். சரியான கண்ணாடியை அணிவதன் மூலம் பார்வை திறனை சரி செய்து கொள்ளலாம். குறைந்த வெளிச்சத்தில் படிப்பதை தவிர்க்கவும். கண்ணில் நீர் வடிந்தால், கண்களை கசக்கக் கூடாது. கண்களை மூடிய நிலையில் 10 நிமிடத்துக்கு சூடான ஒத்தடம் கொடுக்கலாம். 

சிவந்த கண்கள் பிரச்னை உள்ளவர்கள் வெந்நீரில் துணியை நனைத்து பிழிந்து ஒத்தடம் கொடுக்கலாம். கண் நோய் ஏற்பட்டால் கைகளை அடிக்கடி கழுவவும். வீட்டில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி உபயோகிக்கவும். கண் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். தலையணை உறையை தினமும் மாற்றவும். இது போன்ற நடைமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் கண் நோயால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கலாம். 

ரெசிபி

சிறுகீரை கூட்டு: பாசிப்பருப்பு 50 கிராம் அளவுக்கு வேகவைத்து எடுத்து கொள்ளவும். சிறுகீரை ஒரு கட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயம் ஒரு கப், பூண்டு ஐந்து பல், புளிக்கரைசல் சிறிதளவு எடுத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, வறமிளகாய் சேர்த்து தாளிக்கவும். பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து வதக்கவும். பின்னர் சிறுகீரை சேர்த்து வெந்த பின் பாசிப்பருப்பு வேக வைத்தது மற்றும் புளிக்கரைசல் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். தேவையான உப்பு மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும். 

மிக்சட் புரூட் ஜூஸ்:ஆப்பிள் அரை கப், வாழைப்பழம் அரை கப், கருப்பு திராட்சை அரை கப், முலாம்பழம் அரை கப். பழங்களை மிக்சியில் அடித்து வடிகட்டிக் கொள்ளவும். மீண்டும் மிக்சியில் சர்க்கரையை பொடியாக்கி பின்னர் பால் மற்றும் பழச்சாறு சேர்த்து அடித்துக் கொள்ளவும். இந்த மிக்சட் புரூட் ஜூசில் போதுமான அளவு வைட்டமின் ஏ சத்து உள்ளது. 

குச்சிக் கிழங்கு வடை: குச்சிக் கிழங்கை தோல் சீவி கிரைண்டரில் மாவு போல் அரைத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பொட்டுக் கடலையைப் பொடியாக்கிக் கொள்ளவும். சீரகம், சோம்பு, வறமிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லித் தழை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். ஊற வைத்த பருப்பு வகைகளை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதில் பொட்டுக் கடலைத் தூள் மற்றும் சீரகம் உள்ளிட்ட பொருட்களைக் கலந்து, அரைத்து வைத்த குச்சிக் கிழங்கு மாவையும் சேர்த்து வடை பதத்துக்கு பிசையவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்க வேண்டும். எண்ணெய் குறைவாக சேர்க்கவும்.

டயட்

வழக்கமாக கண் பிரச்னையானது தலைவலி, ஒற்றைத் தலைவலி, கிருமித் தொற்று ஆகியவற்றால் வரும் உடல் உஷ்ணம் அதிகம் உள்ளவர்கள், வயதானவர்கள், கண்ணில் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு இதற்கான வாய்ப்பு அதிகம். இவர்கள் தூசு, புகை உள்ள இடங்களை தவிர்க்க வேண்டும். அதிக வெளிச்சம், அதிக இருட்டு தவிர்க்கவும். நீண்ட நாள் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி சொட்டு மருந்து உபயோகிக்கலாம். கண்நோய் தாக்குதல் உள்ள சமயத்தில் வைட்டமின் ஏ சத்து உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் விரைவில் குணமடைய வாய்ப்புள்ளது. 

வைட்டமின் ஏ சத்து அனைத்து வகையான பச்சைக் கீரைகள், வாழைப்பழம், மாம்பழம், கேரட், காலிபிளவர், முட்டைக்கோஸ், மீன் மாத்திரை, பழ வகைகளிலும் உள்ளது. தினமும் கட்டாயம் உணவில் கீரை இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வகையான பழச்சாறு அருந்த வேண்டும். ஏழு லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். கொழுப்பு உணவுகளை கட்டாயம் தவிர்க்கவும். 

அசைவம் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பதும் நல்லது. தினமும் அரை மணி நேரம் வாக்கிங் அவசியம். உணவில் சாதத்தின் அளவை விட காய்கறிகளின் அளவு அதிகம்இருக்க வேண்டும். டீ, காபிக்கு பதிலாக பால் சாப்பிடலாம். இந்த உணவு முறையை கடைபிடித்தால் கண் நோய்கள் உடனடியாக சரியாகிவிடும் என்று சொல்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

கண்ணில் நீர் வடிதல் பிரச்னை உள்ளவர்கள் வேளைக்கீரை, இஞ்சி, மிளகு, வெல்லம் அனைத்தையும் சம அளவில் எடுத்து அரைத்து அதிகாலையில் 15 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் குணமாகும். 

வேப்பிலை, சுக்கு, இந்துப்பு மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து சூடுபடுத்தி கண்கள் மீது வைத்து கட்டிக் கொண்டால் கண்வலி மற்றும் கண் அரிப்பு குணமாகும். 

பூண்டு, சீரகம், இஞ்சி ஒவ்வொன்றிலும் ஐந்து கிராம் அளவுக்கு எடுத்து இடித்து பனைவெல்லம் சேர்த்து கஷாயம் காய்ச்சி குடித்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். கண்ணில் நீர்வடிதல் பிரச் னைக்கும் தீர்வு காணலாம். 

உடல் சூட்டின் காரணமாக கண்களில் பிரச்னை ஏற்படுபவர்கள் வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து சாப்பிடுவதால் உடல் சூடு குறையும். 

வில்வ இலையைப் பொடி செய்து வெந்தயம் கலந்து சாப்பிட்டால் கண் பார்வை தெளிவாக இருக்கும். 

இரவில் தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் கண்ணில் நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்கலாம். 

லெட்டூஸ் கீரையை அரை வேக்காட்டில் வேகவைத்துச் சாப்பிட்டால் கண் நோய் குணமாகும். 

முருங்கைக் கீரையை நீர் சேர்க்காமல் அவித்து கண்கள் மீது வைத்து கட்டிக் கொண்டால் கண் நோய்கள் குணமாகும். 

மருதாணி இலையை அரைத்து கண்கள் மீது வைத்து கட்டிக் கொண்டால் கண்களில் நீர்வடிவது நிற்கும்.

மஞ்சள் காமாலை தடுக்க வழிகள்!

மஞ்சள் காமாலை ஆபத்தான நோய். சரியான நேரத்தில் கண்டு பிடித்து முறையான சிகிச்சை செய்து கொள்ளாவிட்டால் ஆளையே கொன்று விடும். கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்றால் இந்நோய் ஏற்படுகிறது. ரத்தம் மற்றும் உடலுறவு மூலம் இந்த வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார் டாக்டர் சசிக்குமார். அவர் கூறியதாவது: நம் நாட்டில் பெரும்பாலும் ‘கல்லீரல் அழற்சி வைரஸ் ஏ’ என்ற வைரசின் தாக்கம்தான் அதிகம் உள்ளது. இந்த வைரஸ் கல்லீரலை தாக்கி மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது. இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களை எளிதில் தாக்கும். சுகாதாரமற்ற குடிநீர், உணவின் வழியாக இந்த வைரஸ் உடலுக்குள் நுழைகிறது. ரத்தம் செலுத்தும் போது அல்லது உடலுறவின் போதுகூட இது பரவ வாய்ப்புள்ளது. 

இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்த ஒன்று அல்லது இரண்டாவது வாரத்தில் மஞ்சள் காமாலை தோன்றுகிறது. நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல், உடல் அசதி, பசியின்மை, உடல் வலி, சோர்வு, மூட்டு வலி போன்ற அறிகுறிகள் தென்படும். கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சளாக காட்சியளிக்கும். சிறுநீரும் மஞ்சள் நிறத்தில் போகும். மேலும் சிறுநீர் வெளியேற்றுவதிலும் சிரமங்கள் ஏற்படும். கல்லீரல் அழற்சியின் அடுத்தகட்டமாக கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீங்கி பெரிதாகும். இத்துடன் நிணநீர்க்கட்டிகளிலும் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ரத்தப் பரிசோதனையின் மூலம் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்படுகிறது. இந்த வைரசுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் புரதத்தின் அளவு ரத்தத்தில் அதிகரித்திருப்பதை வைத்து மஞ்சள் காமாலை நோயின் தாக்கத்தை அறிந்து கொள்ளலாம். மேலும் கல்லீரலில் முக்கிய என்சைமின் அளவும் அதிகரித்திருக்கும். ரத்தம், சிறுநீர் பரிசோதனைக்கு அடுத்தபடியாக வயிற்றுப் பகுதியில் ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம் கல்லீரல் வீக்கம் மற்றும் மண்ணீரல் பாதிப்புகளை அறிந்து கொள்ளலாம். மஞ்சள் காமாலை என்று தெரிந்த உடன் முறையான சிகிச்சை மற்றும் பத்தியம் மேற்கொள்வது அவசியம். உணவுக் கட்டுப்பாட்டை நோய் முழுமையாக குணமடையும் வரை கடைபிடிக்க வேண்டும். 

கல்லீரல் அழற்சி நீண்ட காலம் இருந்தால் அது கல்லீரல் புற்றுநோயாக மாற வாய்ப்பு உள்ளது. மேலும் கல்லீரல் செயல் இழப்பும் ஏற்படலாம். கர்ப்பிணிகளுக்கு கல்லீரல் அழற்சி பி வைரசால் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் பிறக்கும் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டியது முக்கியம். வைரசுக்கு எதிரான தடுப்பாற்றல் புரதமும் கொடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் மட்டுமே, பிறக்கும் குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்படுவதைத் தடுக்க முடியும். 

பாதுகாப்பு முறை

மஞ்சள் காமாலை நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சுகாதாரமற்ற இடங்களில் விற்கும் குளிர்பானம், உணவு வகைகளை உண்பதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குழந்தைப் பருவத்தில் மஞ்சள் காமாலை தடுப்பூசி போடுவதன் மூலம் நோய் ஏற்படுவதை தடுக்கலாம். மேலும் வெட்டவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்த நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். 

சுகாதாரமான கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டும். ஈக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் தண்ணீர், பால் போன்றவற்றை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி பிறகு குடிக்கலாம். கல்லீரல் பாதிப்பு நோய் உள்ளவர்கள் மது அருந்தும் பழக்கத்தை கண்டிப்பாக விட்டுவிட வேண்டும். கல்லீரல் பாதிப்பு ஏற்படுத்தும் மருந்துகளை தவிர்க்க வேண்டியதும் அவசியம். நோய் முற்றிலும் குணமடையும் வரை மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

ரெசிபி

ரவா கிச்சடி: வெள்ளை ரவை - 400 கிராம், வெங்காயம் - 2, இஞ்சி - 1 துண்டு, பச்சை மிளகாய் - 2, நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைக் கோஸ் மற்றும் பச்சைப் பட்டாணி ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து இஞ்சி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றை வதக்கவும். இதில் உப்பு, சிறிது தண்ணீர், காய்கறிகள் சேர்த்து வேகவிடவும். பின்னர் தேவையான தண்ணீர் சேர்த்து கொதித்த பின்னர் ரவை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

உருளைக் கிழங்கு சப்பாத்தி: உருளைக் கிழங்கை வேக வைத்து எடுத்து ஒன்றிரண்டாக மசித்து கொள்ளவும். இதில் சிறிதளவு மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயப் பொடி, தண்ணீர் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும். பின்னர் சிறிய சப்பாத்திகள் செய்து அதன் இடையில் உருளைக்கிழங்கு ஸ்டப் செய்து பின்னர் சப்பாத்தியை அரிசி மாவில் பிரட்டி தோசைக்கல்லில் போட்டு வேக வைத்து எடுக்கவும். 

சேமியா பிரியாணி: ஒரு பாக்கெட் சேமியா எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் 2, தக்காளி 2, இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் 4, திக்கான தேங்காய்ப்பால், நறுக்கிய முட்டைக் கோஸ், கேரட், பீன்ஸ், காலிபிளவர் 1 கப், காளான் 2 கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு பின்னர் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் காய்கறிகளை சேர்த்து வேக விடவும். சேமியாவை சுடு தண்ணீரில் போட்டு வடிகட்டி எடுத்துக் சேர்க்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விடவும். பின்னர் ஒரு விசில் விட்டு இறக்கவும்.

டயட்

மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் மற் றும் மண்ணீரலில் ஏற்படும் பாதிப்பு. வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. பிறந்த குழந்தைக்கும் மஞ்சள் காமாலை வர வாய்ப்புள்ளது. அது சில நாட்களில் சரியாகி விடும். கல்லீரல், மண்ணீரலோடு மற்ற உறுப்புகளும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு பசி எடுக்காது, கடுமையான காய்ச்சல் இருக்கும். சிறு நீர் வெளியேறுவதில் பிரச்னை மற்றும் சிறுநீர் மஞ்சளாக வெளியேறுதல், கண் மற்றும் உடல் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்ற பிரச்னைகள் உருவாகும். இந்நோயால் பாதிக்கப்பட்டால் 3 மாதங்கள் வரை பத்திய சாப்பாடு சாப்பிட வேண்டும். 

மசாலா வகைகள், கார உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சமையலில் அதிக எண் ணெய் பயன்படுத்தக் கூடாது. மஞ்சள் காமாலை வந்து ஐந்து மாதங்கள் வரை அசைவ உணவுகள் எடுக்கக் கூடாது. முட்டையில் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டும். அதிக புரதம் உள்ள பருப்பு, சோயா வகைகளையும் விலக்கி வைக்கவும். மாவுச் சத்து உள்ள உணவுகள் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். தினமும் 3 இளநீர் குடிக்க வேண்டும். மோர், முட்டையின் வெள்ளைக் கரு தினமும் சாப்பிடலாம். காய்ச்சல் ஏற்பட்டால் அதற்கு மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டு உணவுக் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகள் சாப்பிடுவது மிக முக்கியம்.

பாட்டி வைத்தியம்

காலையில் வெறும் வயிற்றில் 30 மிலி அளவு கீழாநெல்லிச் சாறு குடித்து வந்தால் கல்லீரல் நோய்கள் குணமாகும். 

சுக்காங்கீரை ஒரு கைப்பிடி, சீரகம் 20, சிறிய வெங்காயம் 1, எலுமிச்சை சாறு சிறிதளவு எடுத்து அனைத்தையும் சேர்த்து அரைத்து, அதிகாலையில் சாப்பிட்டால் கல்லீரல் பாதிப்பு குணமாகும். 

செலரிக் கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் உடல் பலவீனம் தீரும். 

துளசிச்சாற்றை தினமும் குடித்து வந்தால் கல்லீரல், மண்ணீரல் நோய் களை தடுக்கலாம்.

நெல்லிக்காய் வற்றல் 50 கிராம், சீரகம் 50 கிராம் இரண்டையும் பொடி செய்து ஒரு வாரத்துக்கு காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். 

நொச்சி இலைகளை நன்றாக அரைத்து சாப்பிட்டால் ஈரல் வீக்கம் குணமாகும். 

பருப்பு கீரை, கீழா நெல்லி இரண்டையும் சம அளவில் எடுத்து மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் வற்றும். 

பூவரசு மரத்தின் கொழுந்து இலைகளுடன் 6 மிளகு சேர்த்து அரைத்து, மோரில் சுண்டைக்காய் அளவு கலந்து மூன்று வேளையும் குடித்தால் மஞ்சள் காமாலை குணமாகும். 

பொன்னாங்கண்ணிக் கீரையைப் பருப்பு போட்டு கடைந்து சாப்பிட்டால் கல்லீரல் நோய் குணமாகும்.

ஈஎன்டி தொல்லைகளுக்கு எளிய தீர்வு!

மழை, குளிர் காலம் தரும் அவஸ்தைகள் ஏராளம். சளி, தும்மல், இருமல், தலைவலி என்று பாடாய்படுத்தி விடும். குளிர் காற்று காதில் நுழைந்து தொண்டையில் அமர்ந்து செய்யும் சேட்டைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள வழி சொல்கிறார் காது, மூக்கு, தொண்டை நிபுணர் சாந்தி செல்வரங்கம். குளிர் காற்று அதிகாலையில் வீட்டில் வேலைகளைத் துவங்கும் பெண்களை அதிகம் தாக்குகிறது. அதிகாலை எழுந்து படிக்கும் குழந்தைகளையும் தாக் கும். குளிர் காலங்களில் அதிகாலை நேரத்தில் வெளியில் நடமாட நேர்ந்தால் உல்லன் துணிகளால் காதுகளை நன்றாக மூடி கட்டிக் கொள்ளலாம். பஸ், பைக்கில் பயணிக்கும் போது இந்த ஐடியா சிறந்தது. 


காதுத் தொற்று நோய்களின் மூலம் குழந்தைகளுக்கு காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். காதுத் தொற்று ஏற்படும் போது உடனடியாக மருத்துவரிடம் காட்டி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஜலதோஷம் உள்ளிட்ட சுவாசத் தொற்றுகளின் வழியாகவே காது பாதிப்புக்கு உள்ளாகிறது. சளி காரணமாக எலும்புக்குழி மற்றும் யூஸ்டேச்சியன் குழல்களில் உள்ள படலங்களில் அழற்சி ஏற்பட்டு வீக்கம் உண்டாகும். குழந்தைகளின் யூஸ்டேச்சியன் குழல் பெரியவர்களைக் காட்டிலும் அளவில் சிறியதாக இருக்கும். இதனால் அழற்சி ஏற்படுத்தும் தொற்றுகளினால் அவை உடனடியாக அடைபடும் வாய்ப்பு உள்ளது.

நடுக்காதில் திரவ தேக்கம் ஏற்பட்டு பாக்டீரியாக்கள் பல்கி பெருகும் சூழல் குளிர்காலத்தில் அதிகம் இருக்கும். இவற்றை தடுக்க காதில் வலி ஏற்பட்ட உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். சளித் தொல்லையின் அடுத்தகட்ட வளர்ச்சி இருமல். இருமல் மூலம் சுவாசப் பாதையில் அடைபட்டிருக்கும் சளி வெளியேற்றப்படுகிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி இருமல் மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் தொடர் இருமலால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். அதே போல் சுவாசப்பாதையான மூக்கில் வைரஸ் தொற்றின் மூலம் சளி மற்றும் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு போன்ற பிரச்னைகள் உண்டாகும். 

இந்த தொற்றின் அடுத்த கட்டமாக குரல் வளையில் வீக்கம் ஏற்பட்டு குரல் கரகரப்பதுடன் பேச முடியாத நிலை ஏற்படும். குளிர்காலத்தில் தூசு அலர்ஜி மற்றும் சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டியது மிகவும் அவசியம். இல்லை எனில் அவர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்படும். குளிர்கால நோய்கள் காது, மூக்கு, தொண்டையை உடனடியாக பாதிக்கும் வாய்ப்புள்ளதால் அவற்றை தடுப்பதற்கான பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். சிறிய பிரச்னை வந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியதும் அவசியம். 

ரெசிபி

வெண்டைக்காய் சூப்: 6 வெண்டைக்காய்களை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வெறும் வாணலியில் வழவழப்பு போக வறுத்து வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம் 1, தக்காளி 1 ஆகியவற்றை பொடியாக நறுக்கி சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். இத்துடன் வெண்டைக்காய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பருப்பு வேக வைத்த தண்ணீர் இரண்டு கப் எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய் இரண்டு வெட்டிப் போடவும். சீரகம், மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். இறக்கும் போது நான்கு சொட்டு எலுமிச்சை சாறு, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து இறக்கவும். குளிருக்கு குடிப்பதற்கு இதமாக இருக்கும். 

காலிபிளவர் சப்ஜி: பெரிய காலிபிளவர் பூ ஒன்றை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். இத்துடன் சின்ன வெங்காயம் ஒரு கப், தக்காளி 2, அரை மூடி துருவிய தேங்காயில் இருந்து எடுத்த தேங்காய்ப்பால், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், தக்காளி சாஸ் 1 டீஸ்பூன், தேவையான அளவு எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி வதக்கவும், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூளை சேர்க்கவும். காலிபிளவரையும் சேர்த்து வதக்கவும். தண்ணீர் சேர்த்து வேகவிடவும். கடைசியில் தேங்காய்ப்பால் விட்டு ஒரு கொதி வந்ததும் தக்காளி சாஸ், உப்பு, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும். 

அரிசி போண்டா: இட்லி மாவு இரண்டு கப் எடுத்துக் கொள்ளவும். ஒரு கப் நிலக்கடலையை மிக்சியில் பொடி செய்து இந்த மாவுடன் சேர்க்கவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் கொட்டவும். இத்துடன் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து வைக்கவும். அரை மணி நேரம் மாவு ஊறிய பின்னர் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். 

டயட்

குளிர் காலத்தில் ஏற்படும் காது, மூக்கு, தொண்டை பிரச்னையைத் தவிர்க்க என்ன சாப்பிடலாம் என சொல்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. குளிர் காலத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் குறைந்த காற்றே இருப்பதால் சுவாச பிரச்னைகள் இருக்கும். குழந்தைகள் மற்றும் வயதானவர்களை சுவாச பிரச்னைகள் எளிதில் தாக்கும். மேலும் சரியான உணவுப்பழக்கம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களையும் குளிர்கால நோய்கள் உடனடியாக தாக்கும். குளிர்காலத்தில் டான்சில் பிரச்னையை உண்டாக்கும் கிருமிகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். 

எனவே குளிர்ச்சியான உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை அப்படியே சாப்பிடுவதை தவிர்க்கவும். சாப்பிடுவதற்கு சிறிது நேரம் முன்பு வெளியில் வைத்திருந்து நன்றாக சுட வைத்து சாப்பிடவும். ஐஸ்கிரீம், கூல்ட்ரிங்ஸ் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். பழங்கள் மற்றும் கீரை வகைகளை குறைவாக உணவில் சேர்க்கவும். குளிர் காலத்தில் ரத்தம் உறையும் தன்மை அதிகரிப்பதால் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதுவே சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் வருவதற்கு காரணம். 

குளிர் காலத்தில் நோய்த்தொற்று ஏற்படும் நபர்கள் உணவு வகைகள் சூடாக எடுத்துக் கொள்வது அவசியம். மசாலா வகை உணவுகள் மற்றும் புரதம் அதிகம் உள்ள உணவுகள் தான் இந்த காலத்துக்கு ஏற்றது. பருப்பு வகைகள், முட்டை, மிளகு சேர்த்த உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். பாலில் குறைந்தளவு சர்க்கரை மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக் குடிப்பதன் மூலம் தொண்டை சார்ந்த பிரச்னைகள் குறையும். 

இதேபோல் நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் சி சத்து உள்ள பழங்கள், காய்கள் சாப்பிட வேண்டும். ஆரஞ்சு, அன்னாசி, தக்காளி, முட்டைக்கோஸ், கேரட் உள்ளிட்ட சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற பழங்கள், காய்கறிகள் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பாட்டி வைத்தியம்

ஆதொண்டை வேரை இடித்து நல்லெண்ணெய்யில் போட்டுக்காய்ச்சி, அந்த எண்ணெய் யைத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் மூக்கடைப்பு, தொண்டைக் கட்டு, தலைவலி குணமாகும். 

ஆடாதொடை வேர், கண்டங்கத்திரி வேர், திப்பிலி மூன்றையும் ஒன்றாக பொடி செய்து சாப்பிட்டால் இருமல் நிற்கும். 

ஆடாதொடை இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட் டால் சளித் தொல்லை தீரும். 

ஆகாயத் தாமரை இலைச்சாறுடன் பன்னீர், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் இருமல், இளைப்பு, ஆஸ்துமா குணமாகும். 

அவரை இலைச்சாறை துணி யில் நனைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலை வலி, தலைபாரம், சைனஸ் பிரச்னைகள் சரியாகும். 

ஒரு பிடி அருகம்புல்லை இடித்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்தால் சளி, சைனஸ் ஆகியவை சரியாகும். 

அதிமதுரம், ஆடாதொடை இரண்டையும் சமஅளவு எடுத்து அரைத்து, தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் தொண்டையில் ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாகும். 

அகில் கட்டை, திப்பிலி, சுக்கு, சித்தரத்தை அனைத்தையும் சம அளவில் எடுத்து கஷாயம் வைத்துக் குடித்தால் காய்ச்சல், சளி, இருமல், நுரையீரல் நோய்கள் குணமாகும். 

அகத்திக் கீரை சாறு மற்றும் அகத்திப் பூ சாறு இரண்டிலும் தேன் கலந்து குடித்தால் தொடர் தும்மல் நிற்கும்.

டென்ஷனுக்கு ‘நோ’ சொல்வது எப்படி?

பலரையும் பாடாய்படுத்தி வரும் டென்ஷன் பிரச்னைக்கு வழி சொல்கிறார் பிசியோதெரபி டாக்டர் கார்த்திகேயன். வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் முதலில் டென்ஷன் ஆகிற ஆளா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள். ஆம் என்று பதில் வந்தால் எந்தெந்த காரணங்களுக்காக டென்ஷன் வருகிறது என்று பட்டியலிடுங்கள். அவற்றை ஒவ்வொன்றாக மூளையில் இருந்து ஒழித்துக் கட்டுங்கள். 

அப்போது எந்த கனமும் இன்றி மனம் லேசாக இருக்கும். உணவு விஷயங்களிலும் கவனம் தேவை. நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருந்து உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறதா, உழைப்புக்கு ஏற்ற உணவு உண்கிறீர்களா என்பதை உணவு ஆலோசகரிடம் விவாதித்து உணவு முறையை அறிந்து கொள்ள வேண்டும். டென்ஷன், மறதி, படபடப்பு, கோபம் உள்ளிட்டவை குறித்து மனநல ஆலோசகரின் உதவியுடன் பழக்க வழக்கத்தை சரி செய்யலாம். தவறான உணவு முறை, வாழ்க்கை முறை இரண்டையும் சரி செய்வதன் மூலம் டென்ஷனை விரட்ட முடியும். 

அடுத்து, உடலில் என்ன நோய் உள்ளது என்பதை கண்டறிய வேண்டும். வயதுக்கு ஏற்ப குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு, ரத்தக் குறைபாடு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு பிரச்னைகள் இருக்க வாய்ப்புள்ளது. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி கண்டறிந்து சிகிச்சை எடுப்பதன் மூலம் நோய்களால் உண்டாகும் தேவையற்ற டென்ஷனை தடுக்கலாம். தடுக்காமல் விட்டால் மன அழுத்தமாக மாறிவிடும். அப்படி ஆகும் போது உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து மற்ற நோய்களின் தீவிரத்தை அதிகரிக்கும். தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட நோய்கள் உடலை அடிக்கடி தாக்கும் வாய்ப்பாக அமையும். வயதுக்கு ஏற்ற உணவுடன் பள்ளிக் குழந்தைகள் ஏதாவது ஒரு விளையாட்டில் பயிற்சி செய்வதன் மூலம் உடல் வலிமை பெறும். உடல் எடை அதிகரிக்காது. டென்ஷனான மனநிலை மாறும். 

டீன் ஏஜ் பருவத்தில் உடல் மற்றும் மனதில் ஏற்படும் குழப்பங்களின் காரணமாக டென்ஷன் வர வாய்ப்புள்ளது. இதே போல் பாரம்பரிய உணவுகளை விட்டுவிட்டு உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் மேற்கத்திய உணவுகள் மீதான ஆர்வத்தை குறைப்பது மிகவும் அவசியம். குழந்தைகளுக்கும் துரித உணவு மற்றும் உடல்நலத்துக்கு ஒவ்வாத புதிய புதிய உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை நாமே வளர்க்காமல், அவர்களுக்கு பிடித்த ஆரோக்கியமான உணவுகளை அவர்களுடன் சேர்ந்து வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம். 

இதன் மூலம் சத்தான உணவுப் பழக்கம் ஏற்படுவதுடன் தேவையற்ற உடல் பிரச்னைகளை தடுக்க முடியும். அஜீரணம், உடல் எடை அதிகரிப்பு, குடல் மற்றும் வயிற்றுப் புண் ஏற்படுதல், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் உள்ளிட்டவைகளை தடுக்கலாம். இந்த வயதில் வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் டீன் ஏஜ் குழந்தைகள் தங்களது பிரச்னைகளை மனம் விட்டு பேச வீட்டில் பெற்றோர் நட்பான சூழலை ஏற்படுத்தி தர வேண்டியதும் முக்கியம். 

நேரத்தை திட்டமிடாததும் டென்ஷனுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. வேலைகளை பகிர்ந்து கொள்வது, குறித்த நேரத்தில் வேலைகளை முடிப்பது மற்றும் அடுத்தவர் மீதான எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது, அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது போன்ற பழக்கங்களின் மூலம் மட்டுமே மனதை இயல்பாக வைத்திருக்க முடியும். தேவையற்ற விஷயங்களை மனதில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் நல்ல சிந்தனைகளுக்கு மனதில் இடம் கிடைக்கும். 30 வயதுக்கு மேல் உடற்பயிற்சியை வழக்கப்படுத்தவும். வாக்கிங் நல்ல பலன் அளிக்கும். மது, புகைபிடித்தல் போன்ற பழக்கங்களால் டென்ஷன் குறையும் என்று நினைப்பது மூட நம்பிக்கை. இது போன்ற பழக்கங்களை கைவிடுவது அவசியம். சரியான நேரத்துக்கு தூங்கும் பழக்கம் மனஅமைதிக்கு நல்லது.

ஆரம்பத்தில் டென்ஷன், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை மாற்றிக் கொள்ளாதவர்கள் விரைவில் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். ஆஸ்துமா, இரைப்பை மற்றும் குடல் பிரச்னைகள், நாள்பட்ட வலி ஆகியவை மனநலப் பிரச்னைகளின் தீவிரத்தை அதிகரிக்கும். உடலில் நோய்கள் குடியேறுவதற்கான சாவியே டென்ஷன் தான். டென்ஷன் என்ற சாவியை தொலைத்தால் நிம்மதியான, நோயற்ற வாழ்வு வாழ முடியும். 

பாட்டி வைத்தியம்

உடல் பருமனை குறைக்க வேளைக்கீரையுடன் பூண்டு சேர்த்து வதக்கி சாப்பிடலாம். டென்ஷனுக்கு உடல் பருமனும் ஒரு காரணம். 

ரத்தசோகை காரணமாக டென்ஷன் ஏற்படலாம். இதற்கு வெறும் வயிற்றில் வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு தண்ணீர் குடிப்பதை வழக்கப்படுத்தி கொள்ளலாம். 

மலை வேப்பம்பூவில் கஷாயம் வைத்து குடித்தால் டென்ஷன் தலைவலி குணமாகும். 

பூண்டு, வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். 

வில்வ இலையை மென்று தின்று தேன் குடித்தால் மன அழுத்த பாதிப்புகள் குணமாகும். 

தினமும் இரவு செவ்வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

ருத்ராட்சம், வல்லாரை இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து தினமும் ஒரு கிராம் பொடியை தேனில் குழைத்து சாப்பிடுவதன் மூலம் மறதியால் உண்டாகும் டென்ஷனை தடுக்கலாம். 

முளைக் கீரை தண்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் சூடு தணியும். 

முட்டைக்கோசுடன் வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் உடல் எடை குறையும். 

முடக்கத்தான் கீரைச்சாற்றில் உளுந்து, கருப்பு எள் இரண்டையும் சம அளவில் ஊற வைத்து, உலர்த்தி பொடி செய்து இரண்டு ஸ்பூன் அள வுக்கு எடுத்து சின்ன வெங்கா யம் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடிக்கவும். இதனால், உடல் வலிமை பெறுவதோடு, டென் ஷனும் குறையும்.

ரெசிபி

ஆலு மசாலா: சின்னச் சின்ன உருளைக் கிழங்குகளாக அரை கிலோ எடுத்துக் கொள்ளவும். தக்காளி 2, வரமிளகாய் 4, சீரகம் ஒரு டீஸ்பூன், பட்டை கிராம்பு 4, பூண்டு 2 பல், பெரிய வெங்காயம் 1, ஏலக்காய் 2 எடுத்துக் கொள்ளவும். உருளைக் கிழங்கை முழுதாக வேக வைத்து உரித்து வைத்துக் கொள்ளவும். தக்காளி தவிர மற்ற மசாலாப் பொருட்கள் அனைத்தையும் வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து அரைத்த கலவையை ஊற்றி, வேகவைத்த உருளைக்கிழங்கு போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். ஆலுமசாலா ரெடி.

மிக்சட் புரூட் சாலட்: கருப்பு திராட்சை, பேரிக்காய், அன்னாசி, ஆப்பிள், கொய்யா, மாம்பழம் ஆகிய பழ வகைகளை ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். சுத்தமாக உரித்து கட் செய்து அதன் மீது எலுமிச்சை பழச்சாறு சிறிதளவு விட்டு கலந்து சாப்பிடவும். சர்க்கரை, பால் எதுவும் சேர்க்க வேண்டாம். இது போன்ற பழக்கலவையை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் மனம் புத்துணர்ச்சி அடையும். 


வெஜிடபிள் ராகி அடை: ராகி மாவு ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். கேரட், முட்டைக்கோஸ், பெரியவெங்காயம், பீன்ஸ், பீட்ரூட் ஆகிய காய்களை துருவி வைத்துக் கொள்ளவும். சீரகத்தூள் ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் 1/2 டீஸ்பூன், இஞ்சி தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். கருவேப்பிலை, கொத்தமல்லி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அனைத்தையும் ராகி மாவில் போட்டு தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற விடவும். பின்னர் அடையாக சுட்டு சாப்பிடலாம். 

டயட்

டென்ஷனில் இருந்து விடுதலை பெற என்ன சாப்பிடலாம் என்று சொல்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. சிறு வயது முதல் உணவில் கவனம் செலுத்தாமல் விடுவது, தவறான உணவு முறை இவை இரண்டும் டென்ஷனுக்கு முக்கிய காரணமாக உள்ளது. சத்தான உணவுகளைத் தவிர்த்து அதிக கொழுப்பு, பல்வேறு ரசாயனங்கள் உள்ள பாஸ்ட் புட் வகைகளை உட்கொள்வதால் சோர்வு, நினைவாற்றல் குறைவு, படபடப்பு, உடல் எடை கூடுவது மற்றும் ரத்த கொதிப்பு, இளம்வயதில் ஹார்ட் அட்டாக் என பல நோய்களின் கூடாரமாக உடல் மாறுகிறது. 

உடலில் பிரச்னைகள் இருக்கும் போது அது மனதையும் பாதித்து ஹார்மோன்களையும் பாதிக்க செய்கிறது. இதனால் டென்ஷன் அதிகரித்து மன அழுத்தத்தில் கொண்டுபோய் விடுகிறது. சிறு வயது முதல் சத்தான கீரை, காய்கறிகள், பழங்கள் சாப்பிடும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். நமது பாரம்பரிய உணவுகளுக்கு முதலிடம் தர வேண்டும். ஆவியில் வேக வைத்த உணவுகள் மற்றும் பருப்பு வகைகள், தானியங்கள் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

பச்சைப்பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட பயறு வகைகளை கலவையாக முளைக் கட்டி சாலடாக சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான புரோட்டீன் கிடைக்கிறது. சத்தான உணவுகள் உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்திருக்கும். குளிர்பான வகைகளை தொடர்ந்து குடிப்பதற்கு தடா போடவும். பர்கர், பீசா மற்றும் ஜங்க் புட் வகைகளை தவிர்க்கவும். இட்லி, கம்பு, ராகிக் களி, சோள மாவு தோசை, கீரை கலந்து செய்யப்படும் அடை வகைகள் என மூன்று வேளை உணவிலும் பாரம்பரிய உணவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி?


குழந்தையின்மை, டென்ஷன், தவறான உணவு முறை, ரசாயன உரம் உள்ள உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்களை தாக்கும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் அதை தடுத்து உயிரை பாதுகாக்கலாம் என்கிறார் டாக்டர் வீ.மு.சசிக்குமார். பெண்களைப் பொறுத்தவரை 40 வயதில் இருந்து மார்பகப் புற்றுநோய் தாக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் 35 வயது முதல் பெண்கள் மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த வயதில் பெண்களின் மார்பகத்தில் திடீர் சுருக்கம் அல்லது வீக்கம், காம்பில் நீர்வடிதல் மற்றும் ரத்தக்கசிவு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மார்பகத்தில் சதைக் கோளங்கள் போன்ற வளர்ச்சியின் காரணமாக மார்பகம் பெரிதாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதில் 80 சதவீதக் கட்டிகள் கேன்சர் கட்டிகள் இல்லை என்பதும் உண்மை. இருப்பினும் அறிகுறிகள் ஏதும் தோன்றினால் பெண்கள் கேன்சருக்கான வாய்ப்பு உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.மார்பகத்தில் கட்டிகள் ஏதும் இருக்கிறதா என்பதை பெண்கள் சுயபரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள முடியும். அழுத்தினால் கட்டிகள் இருப்பது போன்று தோன்றினாலோ, கட்டிகளில் வலி இருப்பது போல உணர்ந்தாலோ, வலி இல்லாவிட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. 

அடுத்தகட்டமாக மார்பகப் புற்றுநோய் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள மெமோகிராபி எனப்படும் எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த சோதனை மூலம் புற்றுநோயை உறுதி செய்ய முடியும். மேலும் நுண்ணிய ஊசியின் வழியாக கட்டியின் திசுக்களை சேகரித்து ஆய்வுக்கூடத்தில் சோதித்து அதனை உறுதி செய்து கொள்ளலாம். கேன்சர் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதிகளவில் ஹார்மோன் மாத்திரை உட்கொள்பவர்கள், மாதவிலக்கு காலத்தில் மார்பில் வரும் மாற்றத்துக்கு சரியாக சிகிச்சை எடுக்காதவர்கள், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், குறைந்த வயதில் கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியவர்கள், எப்போதும் மன வருத்தத்தில் இருப்பவர்கள், அதிக உதிரப்போக்கு, அதிக வெள்ளைப் போக்கு போன்ற பிரச்னையை முறையாக கவனிக்காமல் விட்டவர்கள், தைராய்டு பிரச்னைக்கு சிகிச்சை எடுக்காதவர்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பரம்பரை காரணங்களாலும் வரலாம். 

பாதுகாப்பு முறை: 

பெண்கள் எப்போதும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். தாய்மைக் காலத்தில் பெண்கள் தாய்ப்பால் தருவது மிக முக்கியமானது. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் தவறாமல் செய்ய வேண்டும். குறிப்பாக மாதவிலக்கு நிற்கும் நாட்களில் செய்வது சிறப்பானது. மார்பகப் புற்றுநோயில் வலி பெரும்பாலும் தோன்றுவதில்லை. இதனால் வலியில்லை என்று அலட்சியம் செய்யக்கூடாது. நாள்பட்ட கேன்சருக்கு அறுவை சிகிச்சை, ரேடியோதெரபி மற்றும் ஹீமோதெரபி சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். ஆரம்பத்தில் கேன்சர் கட்டிகள் கண்டறியப்பட்டால் ஹோமியோபதியில் கட்டியை கரைப்பதற்கான மருந்துகள் உள்ளன. மேலும் கேன்சர் பாதிப்பை அடுத்த உறுப்புகளுக்கு பரவாமல் தடுக்க முடியும். 

கெமிக்கல் கலப்புள்ள உணவு வகைகளை கூடுமான வரை தவிர்க்க வேண்டும். கொழுப்பு உணவுகளைத் தவிர்த்து நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். தினமும் வெறும் வயிற்றில் இரண்டு பல் பூண்டு அல்லது வெங்காயம் சாப்பிடுவதன் மூலம் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம். இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. 

முளை கட்டிய பயறு, நெல்லிக்காய் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது சிறந்தது. சுகாதாரமான குடிநீரும் அவசியம். மேலும் ரசாயனக் கலப்பில்லாத காய்கறி, பழங்கள், உணவுப் பொருட்களை சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை தவிர்க்க முடியும். 

ரெசிபி

சேமியா டால் பாத்: சேமியா ஒரு கப் நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பு 50 கிராம் எடுத்து அதில் சீரகத்தூள், பூண்டு இரண்டு பல், வெந்தயம் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். வாணலியில் தாளித்து பின்னர் வெங்காயம்4, தக்காளி1, பச்சை மிளகாய்2 சேர்த்து வதக்கவும். இத்துடன் துவரம்பருப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கடைசியில் சேமியா சேர்த்து வெந்தபின் இறக்கவும். இதில் கார்போஹைட்ரேட், மினரல்கள் கிடைக்கும். 

ரவா அடை: 2 முட்டையை உடைத்து ஊற்றி, அதில் அரைக்கிலோ வெள்ளை ரவை சேர்த்துக் கலக்கவும். 20 சின்ன வெங்காயம் மற்றும் 3 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி இவற்றுடன் சேர்க்கவும். கெட்டியான ஒரு கப் தேங்காய்ப்பால் சேர்த்து உப்பு போட்டு அடை பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். இதனை உடனடியாக தோசைக்கல்லில் அடையாக சுட்டு எடுக்கலாம். இதில் போதுமான அளவு இரும்புச் சத்து உள்ளது. 

கத்தரி வடை: 100 கிராம் கடலைப்பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும். கடலைப் பருப்பு மற்றும் முளை கட்டிய 50 கிராம் பச்சைப் பயறு சேர்த்து மிக்சியில் கரகரப்பாக அரைத்து எடுக்கவும். பொடியாக நறுக்கிய 150 கிராம் கத்தரிக்காய் மற்றும் 6 பச்சைமிளகாயைத் தனியாக அரைத்துக் கொள்ளவும். 
இத்துடன் 50 கிராம் கெட்டித் தயிர், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். இதனை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

டயட்

மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க என்ன சாப்பிடலாம்? சொல்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. பொதுவாக 50 வயதுக்கு மேல்தான் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் வருகிறது. எச்.ஈ.ஆர்.2 என்ற ஜீனும் இதற்கு ஒரு காரணமாகிறது. தாய்மை அடையாத பெண்கள், பரம்பரைக் காரணங்கள், சிறு வயதில் பூப்பு அடைவது மற்றும் நீண்ட நாட்கள் கழித்து மெனோபாஸ் அடைவது, அதிக உடல் எடை, மதுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் ஆகியவை மார்பகப் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணங்களாகும். ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகரிக்கும் போதும் கேன்சர் வளர்ச்சி அதிகரிக்கிறது. 

ஈஸ்ட்ரோஜென் சுரப்பை கட்டுப்படுத்துவதன் மூலம் மார்பகப் புற்றுநோய்க்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம். பழங்கள், காய்கறிகள், புரோட்டீன் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அசைவத்தில் ஆட்டுக்கறி, மீன், மாட்டுக்கறி மற்றும் பன்றிக் கறி ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும். இதே போல் பால் மற்றும் பால் பொருட்கள், நெய், வெண்ணெய், டீ, காபி, கொட்டை வகைகளான பாதாம், முந்திரி, பிஸ்தா தவிர்க்கவும். பழ வகையில் பப்பாளி தவிர்க்கவும். காய்களில் உருளைக்கிழங்கு, பீன்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகிவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும். 

முட்டைக்கோஸ், கேரட், பூசணி, சர்க்கரைப் பூசணி, காளான், பூண்டு, மிளகு, பாலக்கீரை ஆகியவற்றை அதிகளவில் சேர்த்துக் கொள்ளவும். ஆப்பிள், செர்ரி, மாதுளை, திராட்சை மற்றும் தர்பூசணிப் பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம். பருப்பு வகைகளில் சோயாபீன்ஸ், கிட்னி பீன்ஸ், கருப்பு பீன்ஸ் சேர்த்துக் கொள்ளவும். அசைவ வகையில் கொழுப்பு இல்லாத எலும்பு உள்ள சிக்கன் மற்றும் முட்டை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். 

பாட்டி வைத்தியம்

பெண்கள் கண்டிப்பாக ஆறு மாதங்களாவது குழந்தைகளு க்கு தாய்ப்பால் தர வேண்டும். மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு பருப்பு வேகவைத்த தண்ணீரில் இந்தக் கலவையை குழைத்து பற்று போட்ட வேண்டும். 

மகிழம் பூவை பறித்து வைத்து கட்டிக் கொண்டால் மார்புகள் எடுப்பான தோற்றம் அளிக்கும். 

மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் மார்பக வலியைக் குறைக்க சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம். 

மார்பக வலியைக் குறைக்க உளுந்தை அரைத்து பற்றுப் போட்டு அதன் மீது வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். 

வைட்டமின் ஏ சத்துள்ள கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அகத் திக் கீரை மற்றும் முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் வாய்ப்புகளை குறைக்க முடியும். 

இரவு நேரத்தில் பப்பாளிப் பழம் ஒரு துண்டு சாப்பிடுவதன் மூலம் மாதவிலக்கு பிரச்னைகள் வருவதைத் தடுக்கலாம். ரத்தம் சுத்தம் அடையும். புற்றுநோயையும் தவிர்க்கலாம். 

அதிகாலை வெறும் வயிற்றில் சின்ன வெங்காயத்தை பச்சை யாக சாப்பிடுவது நல்லது. 

கொதிக்கும் பாலில் பூண்டைப் போட்டு வெந்த பின்னர் அதனை குழைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும், புற்றுநோய்க்கான வாய்ப்பும் குறையும்.

மேக்கப்


பார்ட்டிக்கு போகாத இளம் பெண்களை இன்று விரல் விடாமலே எண்ணி விடலாம். இதற்கென ஸ்பெஷல் தயாரிப்புகளுக்கும் மெனக்கெடுகிறார்கள். ஒவ்வொரு முறை பார்ட்டிக்கு போகும் போதும், பியூட்டி பார்லர் போய் மேக்கப் செய்து கொள்வது எல்லாருக்கும் சரிப்படாது. ‘‘பார்ட்டி மேக்கப் ஒண்ணும் பிரமாதமான விஷயமே இல்லை. அவங்கவங்களே ஈஸியா போட்டுக்கலாம்’’ என்கிற அழகுக் கலை நிபுணர் மேனகா, எப்படிப் போடுவது என்றும் கற்றுத் தருகிறார்.

‘‘எந்த விதமான மேக்கப் போடறதுக்கு முன்னாடியும் கவனிக்க வேண்டிய விஷயம் அவங்களோட சருமத்தோட தன்மை. வறண்ட சருமமா இருந்தா, மேக்கப் போடறதுக்கு அரை மணி நேரம் முன்னாடி ‘க்ளோ பேக்’ போட்டு, 15 நிமிஷங்கள் அப்படியே விட்டுக் கழுவணும். அதுக்கு மேல மாயிச்சரைசர் தடவி, 3 நிமிஷங்கள் விட்டா, சருமத்தோட வறட்சி மாறி, பட்டு மாதிரி மென்மையாகும்.
இதுவே எண்ணெய் பசை சருமமா இருந்தா, க்ளோ பேக்குக்கு பதிலா ஸ்கின் டோனர் உபயோகிக்கணும். மாயிச்சரைசர் தேவையில்லை. காம்பினேஷன் சருமம் உள்ளவங்களுக்கு சில இடங்கள்ல சருமம் வறண்டும், சில இடங்கள்ல எண்ணெய் பசையோடவும் இருக்கும். அந்தந்த இடத்துக்கேத்தபடி ரெண்டையும் உபயோகிக்கலாம்.

அடுத்தது ஃபவுண்டேஷன். வறண்ட சருமத்துக்கு கிரீம் வடிவிலான ஃபவுண்டேஷனும், எண்ணெய் வழியற சருமத்துக்கு கேக் வடிவிலானதும் பொருந்தும். 
ஃபவுண்டேஷன், எப்போதும் சருமத்தோட அதே கலர்ல இருக்க வேண்டியது முக்கியம். ஃபவுண்டேஷன் போடறப்ப எப்பவுமே முகத்துக்கு மட்டும் போடாம, காதுகள், கழுத்து, முதுகுப் பகுதிக்கும் போடணும்.

ஃபவுண்டேஷன் போட்டதும், அதுக்கு மேல ஐஸ் கட்டிகளால ஒத்தி எடுக்கணும். நம்மூர் வெயிலுக்கு எப்பேர்பட்ட மேக்கப்பும் உருகி வழியும். ஐஸ் கட்டி ஒத்தடம் தந்த பிறகு மேக்கப் போட்டா, எத்தனை மணி நேரமானாலும் மேக்கப் வழியாது.அடுத்ததா கண் மேக்கப். பெரிய கண்களா இருந்தா, கீழ் பகுதில மட்டும் காஜல் போட்டா போதும். மேலயும் போட்டா, கண்கள் இன்னும் பெரிசா தெரியும். அதுவே சின்ன கண்களுக்கு மேல, கீழே ரெண்டுலயும் காஜலும், ஐ லைனரும் போடலாம்.

புருவங்கள் சரியான வடிவத்துல இருக்க வேண்டியது மேக்கப்ல ரொம்ப முக்கியம். புருவங்களுக்கு கீழே ஹைலைட்டர் யூஸ் பண்ணலாம். அதுக்குக் கீழே உடைக்கு மேட்ச்சா ஐ ஷேடோ போடலாம். புருவங்களுக்கு ஐ ப்ரோ பென்சில் யூஸ் பண்றவங்க, கருப்பு கலரை தவிர்த்து, பிரவுன் பென்சில் உபயோகிச்சா, இயற்கையா தெரியும். 

கண் இமைகள் பெரிசா இருக்கிறவங்க, வாட்டர் ப்ரூஃப் மஸ்காரா போட்டாலே போதும். அப்படியில்லாதவங்க, செயற்கை இமைகள் கிடைக்குது. அதையும் ஒட்டிக்கலாம்.அப்புறம் மூக்கு... அகலமான மூக்கு இருந்தா, ‘நோஸ் கட்டிங்’ பண்ணி சரியாக்கலாம். டார்க் கலர் ஃபவுண்டேஷனை மூக்கோட அகலமான ரெண்டு பகுதிலயும் ரொம்ப லைட்டா தடவிட்டு, நடுவுல மட்டும் லைட் ஷேடு தடவலாம். கன்னங்கள் பெரிசா, அகலமா இருந்தாலும், இதே டெக்னிக்ல சரியாக்கலாம். கன்னங்களோட எலும்புப் பகுதில பிளஷர் உபயோகிக்கலாம். பகல் நேரத்துல மேட் ஃபினிஷ் பிளஷரும், சாயந்திர நேர பார்ட்டிக்கு பளபளக்கிற கிளிட்டர் பிளஷரும் பொருத்தமா இருக்கும்.

கடைசியா உதடுகள்... ஃபவுண்டேஷன் போடறப்பவே உதடுகளுக்கும் சேர்த்துப் போடணும். அதுக்குப் பிறகு நமக்கு வேண்டிய வடிவத்துல லிப் பென்சிலால உதடுகளுக்கு அவுட் லைன் வரையலாம். இப்ப நிறைய கலர்ல லிப் பென்சில் கிடைக்குது. இது மூலமா பெரிய உதடுகளை சின்னதாகவும், சின்ன உதடுகளைப் பெரிசாவும் காட்டலாம். அதுக்கு மேல லிப்ஸ்டிக் போட்டு, டிஷ்யூ பேப்பரால துடைச்சு எடுத்துட்டு, ரொம்ப கம்மியா லிப் கிளாஸ் 
தடவலாம். ரெண்டு, மூணு கலர் கலந்து லிப்ஸ்டிக் போட்டா கூடுதல் கவர்ச்சியா இருக்கும்.

என்னதான் லேட்டா பார்ட்டி முடிச்சிட்டு வந்தாலும், மேக்கப்பை கலைக்க அலுத்துக்கிட்டு, அப்படியே தூங்கக் கூடாது. இது சருமத்தை சுவாசிக்க விடாமச் செய்துடும். வெறுமனே சோப் போட்டுக் கழுவறதும் கூடாது. கிளென்சிங் மில்க் வச்சு, ஈர பஞ்சால துடைச்சு எடுத்துட்டு, அப்புறம் ஃபேஸ் வாஷ் உபயோகிச்சு, ரெண்டு, மூணு முறை முகம் கழுவிட்டுதான் தூங்கப் போகணும்...’’ என்கிறார் மேனகா. 

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | free samples without surveys